27/11/2018

திடீர் கோடீஸ்வரி பாஜக வானதி சீனிவாசன்...


ஊழலை ஒழிக்க வந்த ஆர்எஸ்எஸ் உத்தமர்களில் தமிழக உத்தமர் வானதி சீனிவாசனின் ஊழல்கள்..

வானதி சீனிவாசன் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மின்விசிறியை தவணை முறையில் வாங்கி அதில் கடைசித் தவணை கட்ட முடியாத ஒரு எளிய நடுத்தர வர்க்க குடும்பத் தலைவியாக இருந்திருக்கிறார்.

அக்காவை கூட்டம் மற்றும் போராட்டங்களில் பேச அழைக்கும் பா.ஜ.கவினர் அவருக்கு போக்குவரத்து மற்றும் வழிச்செலவுக்கு பணம் கொடுத்து உதவி வந்துள்ளனர்.

ஆனால் இன்று அக்கா வானதி சீனிவாசன் சில பல கோடிகளுக்கு அதிபதி. இதை நாம் சொல்லவில்லை. இதைச் சொன்னது அதே பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவரும், திருச்செந்தூரில் இருக்கும் முக்கிய பிரமுகருமான பாலசுப்பிரமணிய ஆதித்யன். இனி அவரே பேசுகிறார், கேளுங்கள்.

கடந்த 2003 -ம் ஆண்டு நான் பாஜக தூத்துக்குடி மாவட்ட பொருளாளராகவும், திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்த போது திருச்செந்தூரில் ஆர்பாட்டம் நிகழ்ச்சிக்கு பேச வந்து இருந்தீர்கள். வழிச் செலவு பணமும் தந்து சில நூறையும் தந்தோம்.

அப்போது நீங்கள் ஒரு நடுத்தர வாழ்வில் இருந்தீர்கள் என்பதை நன்கு அறிவேன்.

அது மட்டுமல்ல மையிலாப்பூரில் நம் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடையில் ரூ 700 விலை உள்ள Sealing Fan 5 Installment க்கு வாங்கி அதில் 4 தவணை மட்டும் தாங்கள் கட்டிய விபரம் உட்பட அரசல் புரசலாக நம் பாஜகவினரே பல முறை பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். இது கூட உங்களை சிறுமைப் படுத்த இங்கு குறிப்பிடவில்லை. உங்கள் பொருளாதார சூழலை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன் . ஒரு தவணை உங்களால் கட்ட முடியவில்லையாம்.

யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் இன்று தாங்கள் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கின்றீர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மைலாப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்...

அசையும் சொத்துக்கள் ரூ. 48,29,891 , அசையாச் சொத்துக்கள் ரூ. 68,80,000 , கடன் ரூ.  50,000. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,16,59,891.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்...

அசையும் சொத்துக்கள் ரூ. 1,17,51,853, அசையாச் சொத்துக்கள் ரூ. 5,30,50,000, கடன் ரூ. 35,17,344. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 6,12,84,509.

ஐந்தாண்டுகளில் அக்காவின் சொத்து மதிப்பு சுமார் ஐந்து மடங்கு அதாவது 525 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறுகிய காலத்தில் இவ்வளவு பணமும் சொத்துக்களும் எப்படி வந்தன?

அத்தனையும் தானும் தனது கணவர் சீனிவாசனும் வழக்குறைஞர் தொழில் செய்து சம்பாதித்தவை என்று வானதி சமாளிக்கக் கூடும். வழக்கறிஞர் ஊதியம் எவ்வளவு...? மத்திய அமைச்சர் பினாமி என்ற கருத்து வேறு..? உறுதிப்படுத்துவதாக உள்ளது வருமானம்.

ஆனால், இந்தச் சொத்துக்கள் வானதி குடும்பத்தினர் ஊழல்களாலும், தங்களது அரசியல் சொல்வாக்கை பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்தவை என்று அம்பலப்படுத்துகிறார்கள் பாலசுப்பிரமணிய ஆதித்யனும், பா.ஜ.க-வைச் சேர்ந்த அவரது நண்பர் சங்கரநாராயணனும். சைலாக் சிஸ்டம்ஸ் (Zylog Systems) என்ற நிறுவனத்தில், வானதி சீனிவாசன் திட்டமிட்டு அவரது தம்பி சிவகுமார் கந்தசாமியை களமிறக்கி நடத்திய வங்கி மோசடியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார் பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

சென்னையிலுள்ள சைலாக் சிஸ்டம்ஸ் (Zylog Systems) 1995 -ம் ஆண்டு துவங்கப்பட்ட மென்பொருள் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக வானதியின் கணவர் சீனிவாசன் இருந்திருக்கிறார்.  வானதியின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் படி அந்நிறுவனத்தின் 20,000 பங்குகளையும் வைத்துள்ளார்.

சைலாக் சிஸ்டம்ஸ், ஜூலை 20, 2007 அன்று ஆரம்ப பொதுப் பங்கு விநியோகத்தின் (IPO) மூலம் முதலீடுகளை பெறுவதற்காக ரூ.10 முக மதிப்புள்ள 3,600,000 பங்குகளை வெளியிட்டது. வர்த்தகம் தொடங்கும் போது அதன் ஆரம்ப விலை ரூ. 350-ஆக நிர்ணயிக்கப்பட்டது. பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் செய்வதற்கு, யார் வசம் எவ்வளவு பங்குகள் உள்ளன, எத்தனை பங்குகள் சந்தையில் வெளியிடப்படுகின்றன போன்ற இதர விவரங்களை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் (SEBI) கொடுக்க வேண்டும்.

சைலாக்கின் நிறுவனர்கள் தங்கள் வசமுள்ள பங்குகளைப் பற்றி பொய்யான மற்றும் தவறான தகவல்களை கொடுத்ததாகக் கண்டறிந்த செபி, இந்நிறுவனதையும், அதன் நிறுவனர்கள் சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் ஷேஷரத்தினம் ஆகியோரையும் பங்கு சந்தையிலிருந்து தடை செய்து 2012 -ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தன. இந்த காலத்தில் இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்தவர் வானதியின் கணவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி, இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் வசூலித்த சேவை வரி சுமார் ரூ.3 கோடியை அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.

மேலும், 2012 -ம் ஆண்டு காலகட்டத்தில் தனது ஊழியர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் கொடுக்காமலும் இருந்துள்ளது. ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியையும் (PF) அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.

சைலாக் நிறுவனம் தனது தொழில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 2009-2013 காலகட்டத்தில், யூனியன் வங்கி, பெடரல் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் பல நூறு கோடிகளை கடனாகப் பெற்றது. ஆனால், அவற்றை தொழில் வர்த்தகத்திற்கு பயன்படுத்தாமல், முறைகேடாக பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்தனர் அதன் நிறுவனர்கள். அவற்றுள் சைலாக்கின் ஐரோப்பிய கிளை (Zylog systems Europe Ltd) வாங்கிய சொத்துக்களும் அடக்கம். அதாவது இந்திய வங்கிகளில் வாங்கிய கடனைக் கொண்டு வெளிநாட்டில் முறைகேடாக முதலீடுகளை செய்துள்ளனர். இந்த கால கட்டத்தில் ஐரோப்பிய கிளையின் இயக்குனராக வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி இருந்துள்ளார்.

மேலும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையையும் கட்டாமல் ஏமாற்றி வந்துள்ளது இந்நிறுவனம். இதனால் 2013-ம் ஆண்டு அவ்வங்கிகள் சுமார் ரூ.740 கோடியை வராக்கடனாக அறிவித்தன. அத்துடன், மத்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்து அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்திய பொதுத்துறை வங்கிகளை பட்டை நாமம் போட்டு ஏமாற்றிய கயவர்கள் பட்டியலில் மல்லையா மற்றும் இதர முதலாளிகள் மட்டுமல்ல, சைலாக் நிறுவனர்களான சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் இராமானுஜம் ஷேஷரத்தினம் போன்ற ஆர்.எஸ்.எஸ்-காரர்களின்  நிறுவனங்களும் உள்ளன. ஆம், வானதியின் வர்க்கம் மேம்பட ‘வர்த்தக’ வசதி செய்து கொடுத்த சைலாக் நிறுவனத்தின் மூலவர்கள் சாட்சாத் ஸ்வயம் சேவகர்கள்.

கடன் கொடுத்த வங்கிகள், கடன் தீர்ப்பாயத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தன. அதில் அதிகாரபூர்வ கடன் தீர்ப்பாளரை (Official Liquidator) நியமித்து சொத்துக்களை முடக்கி, அச்சொத்துக்களை ஏலம் விட்டு நிலுவையைக் கட்ட நவம்பர் 2014 -ல் தீர்ப்பளித்தது, சென்னை உயர் நீதிமன்றம்.

மோடி அரசு பதவியேற்ற பின் நவம்பர், 2014-ல் வானதியின் கணவர் சு. சீனிவாசன் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படுகிறார். இதற்குப் பின் 2015 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சைலாக் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி சைலாக் தாய் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்க பரிந்துரைக்கப் படுகிறார்.

மோடி அரசு, “என் நாடு, என் அரசு, என் குரல்” என்ற முழக்கத்துடன் அரசில் மக்கள் பங்கேற்கும் திட்டத்தை அறிவித்து ’என் அரசு’ (mygov.in) என்ற வலைத்தளத்தை நடத்தி வருகிறது. அந்த வலைத்தளத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை சைலாக் நிறுவனம் 2015 -ம் ஆண்டில் பெற்றது.

இப்போது எல்லாப் புள்ளிகளையும் இணைத்து பாருங்கள். தலை மோடி அரசு முதல் வால் வானதி வரை இந்த ஊழல் வரலாற்றில் முக்கியமான பாத்திரத்தை ஆற்றியுள்ளார்கள்.

இதனிடையே சைலாக் நிறுவனத்தின் துணை நிறுவனமான சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் 2009 -ம் ஆண்டு யூனியன் வங்கியிலிருந்து ரூ.61.5 கோடியை குறுகிய கால கடனாகப் பெற்றுள்ளது. இணைய சேவை வழங்கல் தொடர்பான வைஃபை (WiFi) திட்டத்தில் பொருட்களை வாங்க முதலீடு செய்வதற்கென்று இந்தக் கடன் பெறப்பட்டது. இந்தக் கடனை சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை.

அது மட்டுமல்ல, போலியான நிறுவனங்களை உருவாக்கியும், போலியான ரசீதுகளை உருவாக்கியும் பொருட்களை வாங்கியதாக கணக்குக் காட்டியது சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம். அப்படி உருவாக்கப்பட்ட பெயர்ப்பலகை நிறுவனங்களின் மூலம், வங்கியில் பெறப்பட்ட நிதியை வெளியேற்றி விட்டு, நட்டமடைந்து விட்டதாக ஏமாற்றியிருக்கிறார்கள். இதைக் கண்டறிந்த யூனியன் வங்கி, சைலாக் நிறுவனர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சி.பி.ஐ) புகார் அளித்தது. மோசடி மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் ஜனவரி 30, 2017 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் தான் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது  தொலைக்காட்சி விவாதங்களில் கருப்புப் பணத்தை மீட்பதற்கு நாட்டு மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்கள். ஏடிஎம் வரிசையில் நின்று செத்த மக்களைக் கொச்சைப் படுத்தினார்கள்.

ஆயினும் வானதி சீனிவாசனின் இந்த ஊழலை மறுப்பதற்கு அவரோ அவரது பக்தாள் கூட்டமோ கடப்பாறையை விழுங்க வேண்டியிருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.