29/06/2018

ஆண்களும் அணிந்த தாலி...


தாலி என்பது கழுத்து நகையைக் குறிக்கும் பெயர்ச்சொல்.

இதை பழங்காலத்தில் ஆண்களும் பெண்களும் அணிந்தனர்.

ஒரு பெண் ஒரு ஆணை "நான் உன்னைக் கட்டிக்கொள்கிறேன்" என்று கூறுவது முரண்பாடான ஒன்று கிடையாது.

ஆணுக்கு பெண் தாலி அணிவிக்கும் வழக்கத்தையே குறிக்கிறது. பிறகு இதுவே ஆணின் காலில் பெண் மெட்டி அணிவிக்கும் வழக்கம் வந்தது.பிறகு அதுவும் பெண்களுக்கு போனது.

புலிப்பல் "தாலி" என்ற அணியை ஆண், பெண்இரு பாலாரும் அணிந்திருந்தனர்
என்பது பண்டைத்தமிழ் இலக்கியங்களில்இருந்து தெரிய வருகிறது.

ஆதிமனிதர் தாம் வேட்டையாடிய சில விலங்குகளின் எலும்புகள் , பற்கள் , நகங்கள் போன்றவற்றை அணிகலன்களாக்கி அணிந்தணர்.

குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த வேட்டுவர்கள் தமது பிள்ளைகளுக்குப் புலிப்பல் தாலி அணிவித்தது சங்க இலக்கியங்களிலிருந்தும் தெளிவாகிறது.

ஆனால், சிறுவரும், சிறுமியரும் புலிப்பல் தாலி அணிந்தமையால் மறக் குலத்தின் வழிவந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காக  அணிவிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவ்வழக்கமே பிற்காலத்தில் "ஐம்படைத் தாலியாக" வளர்ச்சியடைந்தது.
புலிப்பல் தாலி என்னும் காப்பணி ஐம்படைத் தாலிக்கு முற்பட்டது ஆகும்.

ஐம்படைத் தாலி என்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழரிடையே வழக்கில் இருந்த ஒருவகை அணிகலன் ஆகும்.

சிறுவர்களின் கழுத்தில் காவலுக்காக இது அணியப்பட்டதாகத் தெரிகிறது .

புறநானூற்றுப் பாடல் ஒன்றில் "தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்" மிக இளம் வயதிலேயே போருக்குச் சென்றதைக் காட்டுமுகமாக,
"தாலி களைந்தன்று மிலனே"
என்று அவன் தாலியை இன்னும் களையாத சிறுவயதினனாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
வாலிபப் பருவம் அடைந்தவுடன் தாலியைக் களைந்துவிட்டே கால்களில் கழல் அணியும் வழக்கம் இருந்தது .

"தாலம்" என்ற சொல் புல்வகையைச் சார்ந்த பனை போன்ற தாவரங்களைக் குறிப்பது.
ஒரு காலத்தில் பனை ஓலையைச் சுருட்டி நூலில் கட்டிக் கழுத்தில் அணிந்தமையாலேயே தாலி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு.

நோய்வராமல் தடுப்பதற்காக மந்திர ஓலைச் சுருளைக் கை,கால், கழுத்து போன்ற உறுப்புக்களில் அணிந்து கொள்வது பழங்காலத்தில் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.

எனவே "தாலம்" என்ற சொல்லிலிருந்து காப்பு அணிகளைக் குறிக்கும் "தாலி". என்ற பொதுச் சொல் தோன்றியிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.

தற்காலத்தில் தமிழ்நாட்டில் ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

(பெரிய இடத்து இளைஞர்கள் புலிப்பல் போன்ற அமைப்பை சங்கிலியில் அணிவது காணப்படுகிறது.இதை மைனர் செயின் என்கிறார்கள்)

மிகவும் அண்மைக்காலம் வரை செட்டிநாடு போன்ற தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இவ்வழக்கம் இருந்துள்ளது.

ஆனாலும், இலங்கையில் இன்னும் பஞ்சாயுதம் என்ற பெயரில் இவ்வணி புழக்கத்தில் உள்ளது.

யாழ்ப்பாணத்து நகைக்கடைகளில், முக்கிய அணி வகைகளுள் ஒன்றாகப். பல்வேறு வடிவமைப்புக்களைக் கொண்ட பஞ்சாயுதங்களை இன்றும் காண முடியும்.

இத்தகைய பஞ்சாயுத அணிகளில் கதாயுதத்திற்குப் பதிலாக ஈட்டி, சூலம் போன்ற ஆயுதங்கள் காணப்படுவதும் உண்டு.

சூலம் சிவனுக்கு உரியது என்பதும், யாழ்ப்பாண மக்கள் சைவ மரபைப் பின்பற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே வேளை, சிலப்பதிகாரம் கொற்றவை என்னும் பழந்தமிழர் தெய்வத்தின் ஆயுதங்களாக, சூலம், வாள், வில், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.

இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றிச் சிங்களவர்களும் பஞ்சாயுதம் அணியும் வழக்கத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பழங்காலத்தைப் போலவே சிறுவர்களுக்கே இது அணிவிக்கப்படுகிறது.பதக்க வடிவில் பொன்னால் செய்யப்படும் இதனைப் பொன் சங்கிலியில் கோர்த்து அணிவிப்பர்.

குழந்தை பிறந்து பொதுவாக 31 ஆவது நாள் துடக்குக் கழிவுச் சடங்கின்போது பஞ்சாயுதம் அணிவிப்பது வழக்கமாக உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.