22/07/2018

சித்தர்களின் பிரபஞ்ச பயணம்...


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்.

நபி நாயகம் அவர்களும் ஒருவகையில் சித்தர் தான்,

நமது இஸ்லாமிய சகோதரர்களுக்கு
சிவன் என்பவர் ஒரு நபியே.

ஒவ்வொரு காலத்திற்க்கும்
ஒவ்வொரு சமூகத்திற்கும்
பரம்பொருள் தான் படைத்த மக்களை வழிநடத்த ஒரு தூதரை அனுப்புவார்கள். அவர்களின் மீதான அதீத அன்பின் விளைவாய் அவர்களை கடவுளாக ஏற்றுக்கொள்ளவோம் அவ்வளவுதான்....

சரி நபி நாயகத்தின் விண்வெளி பயணத்தை பார்ப்போம்.

ஒரு இரவில், மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து, ஜெருஸலமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் ( 17:1 ) அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை மேலும் விளக்கமாக பைத்துல் முகத்தஸில் இருந்து விண்ணுலகத்துக்கு தான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஒவ்வொரு வானத்தையும் கடந்து இறைவனின் ஏராளமான அத்தாட்சிகளைப் பார்த்ததாகவும், அல்லாஹ்வை நேரில் பார்க்காவிட்டாலும் அல்லாஹ்விடம் உரையாடியதாகவும், அப்போதுதான் ஐந்து வேளைத் தொழுகையை அல்லாஹ் கடமையாக்கியதாகவும் விளக்கியுள்ளனர்.

இது குறித்து முழுமையாக அறிய புகாரீ 349, 3887 ஆகிய ஹதீஸ்களைப் பார்க்கலாம்.

ஒரு இரவில் ஏழு வானங்களையும் கடந்து சென்று விட்டு பல்வேறு அத்தாட்சிகளையும் பார்த்து விட்டு திரும்ப இயலுமா?

அப்படியானால் எவ்வளவு வேகத்தில் பயணம் செய்திருக்க முடியும்?

அவ்வளவு வேகத்தில் பயணம் செய்வதை மனிதனின் உடல் தாங்குமா?

என்பன போன்ற கேள்விகள் இதில் எழுப்பப்படலாம்.

இதில் எதுவுமே மனிதர்களுக்குச் சாத்தியமாகாது என்பது உண்மை தான். இப்பயணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக மேற்கொண்டார்கள் என்றால் நிச்சயமாக இது சாத்தியமில்லை தான். இப்பயணம் படைத்த இறைவனால் நிகழ்த்தப்பட்டதாகும். எதை நாடுகிறானோ அதைச் செய்ய வல்லவன் தான் இறைவன். இதுதான் இயலும். இந்த அளவுக்குத்தான் இயலும். இவை இயலாது என்ற நிலையில் இருப்பவன் இறைவனாக இருக்க முடியாது.

விண்வெளிப் பயணம் பற்றி பேசும் இவ்வசனத்தில் தனது தூதர் முஹம்மது நபியை ஒரு இரவில் அழைத்துச் சென்றவன் பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட தூயவன் என்று கூறப்படுகிறது.

தனக்கு எல்லாம் இயலும் என்பதைச் சொல்வதற்காகவே இதைப்பற்றி அல்லாஹ் பேசுகிறான் என்பதை இந்த வாக்கியத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். "இதைச் செய்தவன் இறைவனாகிய நான் தான்" என்று கூறி இந்தச் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.

இறைவனிடமிருந்து ஒரு விநாடி நேரத்துக்குள் வானவர் ஜிப்ரீல் இறைவனது கட்டளையைக் கொண்டு வருகிறார். அங்கிருந்து இங்கே ஒரு விநாடிக்குள் வானவர் வருவதற்குப் பதிலாக இங்கிருப்பவர் வானுலகம் அழைத்துச் செல்லப்படுகிறார். இரண்டுக்கும் அடிப்படை ஒன்று தான். வானவர் என்பதால் அவர் ஒளிவேகத்திலும், ஒளியை மிஞ்சும் வேகத்திலும் செல்ல முடியும். ஆனால் முஹம்மது நபி வானவர் அல்லவே? அவர் மனிதர் தானே? மனிதனுக்கு இது இயலுமா என்று சந்தேகம் வந்தால் மிஃராஜ் ஹதீஸில் இதற்கான விடை அடங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வானவர் அழைத்துச் செல்ல வந்தபோது புராக் எனும் வாகனம் கொண்டு வரப்பட்டதாக புகாரீ 3887வது ஹதீஸிலும், இன்னும் பல ஹதீஸ்களிலும் கூறப்படுகிறது.

அதன் அளவைப் பற்றிக் கூறும்போது குதிரையை விட சற்று சிறியதாகவும், கோவேறுக் கழுதையை விட சற்று பெரிதாகவும் இருந்தது என்றும், அது கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு ஒரு அடியை வைக்கும் எனவும் அந்த ஹதீஸ் கூறுகிறது.

ஒரு குதிரை அளவுக்கு உள்ள வாகனத்தினால் அதிகபட்சம் அரை மீட்டர் அளவுக்குத்தான் அடியெடுத்து வைக்க முடியும். கண்ணுக்கு எட்டிய தூரம் அடி எடுத்து வைக்கும் என்றால் இது காலடியைக் கூறவில்லை. அதன் பறக்கும் சக்தியைத்தான் கூறுகிறது. கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு அடியை எடுத்து வைக்கும் என்றால் ஒளிவேகத்தில் பயணம் என்று பொருள்.

மின் ஆற்றல் மூலம் வேகமாகச் செல்லும் வாகனத்தை மனிதனே உருவாக்க முடிகிறது என்றால் அதை மிஞ்சும் சக்தி வாய்ந்த அதிவேகத்தில் செல்லும் வாகனத்தை உருவாக்குவது இறைவனுக்கு எளிதானது தான். இது போன்ற வாகனம் இல்லாமலே இறைவனால் விண்ணுலகத்துக்கு அழைத்துச் செல்ல இயலும் என்றாலும் நாம் எளிதாக நம்பி ஏற்றுக் கொள்ளும் ஏற்பாடுகளையும் செய்து இறைவன் அருள் புரிந்துள்ளான்.

புராக் என்ற சொல்லுக்கு மின்னல் என்பது பொருள். இப்பெயரும் ஒளிவேகத்தில் செல்லும் வாகனம் என்பதை உறுதி செய்கிறது.

ஒளி வேகத்தில் பயணம் செய்தால் ஒரு இரவில் விண்ணுலகம் சென்று வருவது சாத்தியமானது தான். அந்த வேகத்தில் செல்லும் வாகனம் மனிதனால் கண்டுபிடிக்கப்படாததால் தான் இது சாத்தியமில்லாததாகத் தெரிகின்றது.
வேகமாகச் செல்லும் வாகனம் என்றாலும் அந்த வேகத்தில் மனிதன் பயணித்தால் இதயம் வெடித்துச் சிதறிவிடுமே என்ற சந்தேகம் அடுத்து வரலாம்.

விண்வெளியில் பயணம் செய்பவனின் இதயம் இறுக்கமடைந்து விடும் என்பது உண்மை. இதைத் திருக்குர்ஆனே தெளிவாகச் சொல்லியும் இருக்கிறது.
(இது குறித்து அறிய 6:125 வது வசனத்தையும் 72வது குறிப்பையும் காண்க!)

இறைவன் நாடினால் இதயம் வெடித்துச் சிதறாத வகையில் அழைத்துச் செல்ல முடியும் என்றாலும் மனிதர்கள் நம்புவதற்கு எளிதாக இருக்கும் பொருட்டு விண்வெளிப் பயணத்துக்கு அழைத்துச் செல்லும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்தைப் பிளந்து சில மாற்றங்களை வானவர்கள் மூலம் அல்லாஹ் செய்தான்.
இது புகாரீ 349, 3207 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

வேகமாகப் பயணம் செல்லும்போது பாதிப்பு ஏற்படாத பாதுகாப்பு ஏற்பாடும் இதில் அடங்கி இருக்கலாம். அதாவது விரைவான பயணத்தை மேற்கொள்ளும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாதிக்காத வகையில் அவர்களின் இதயத்தில் உரிய ஏற்படுகளை இறைவன் செய்து விட்டதால் அந்த வேகத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது.
அல்லாஹ்வின் வல்லமையைப் புரிந்து அவனை நம்பும் மக்களுக்கு இது சாதாரணமானது தான்.

மலரட்டும் உலக சகோதரத்துவம் , வளரட்டும் மத நல்லிணக்கம், ஒழியட்டும் மொழி வேற்றுமை காணும் மனப்பாங்கு.

இதற்காகத்தான் அணைத்து சித்தர்கள் , ஞானிகள் , ரிஷிகள் , இறைத்தூதர்கள் , முனிவர்கள் தோன்றி பல வழிகளை காட்டினார்கள். இது இடத்திற்கேற்ப
பல வடிவங்களில் உள்ளதே தவிர நோக்கம் ஒன்றுதான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.