21/10/2018

அபிஜித் நட்சத்திரம்...


கலியுகத்தில் மனிதர்களுக்காக நல்ல காலங்களைக் கண்டு அறிந்து நற்பலன்களைக் கண்டிட மொத்தம் 28 நட்சத்திரங்கள் இருந்தன என்பதை யாரேனும் அறிந்திருக்கிறீர்களா..?

அஸ்வினி முதல் ரேவதி வரை மட்டுமே நம் பயன்பாட்டில் இருப்பவை தெரியும்.

ஆனால், முதல் நட்சத்திரமாகச் சொல்லப்பட்டது அபிஜித் நட்சத்திரம் ஜீலியன் காலண்டர் குறிப்புகளிலேயே அபிஜித் என்ற நட்சத்திரம் முகூர்த்த காலமாக மாற்றப்பட்டு அங்கங்கே இடக்குறிகளாக எழுதப்பட்டிருந்தன.

கடவுள் வழிபாட்டுக்கும், சுப நிகழ்ச்சிகளுக்கும் தினமும் காலை வேளையில் திதி-வாரம்-நட்சத்திரம்-யோகம்−கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கணக்கிட்டு பஞ்சாங்கக் குறிப்புகளுடன் முகூர்த்த நேரங்கள் சொல்லப்பட்டன.

வெற்றி அடைய விரும்பும் அனைவரும் இந்த அபிஜித் முகூர்த்த காலத்தைப் பயன்படுத்தலாம். தொழிற்கூடத்தை நிறுவி வியாபார ஏற்ற இறக்கத்தாலும் தேதிகளின் தொந்தரவாலும் இழந்தவைகளைப் பெற்றிட இந்தநேரமானது உன்னதமான காலம் என்று சொல்லலாம்.

அபிஜித் நேரம் என்பது என்னப நட்சத்திரக் கூட்டத்தின் முன்பாக முதல் நட்சத்திரமாக நின்றபோது இதற்கு சக்தி அதிகமாக இருக்கவில்லை. இது தனியே பிரிந்து வெற்றிக்கான நேரம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு ஜோதிடர்களும் ஆன்மீக அருளாளர்களும் இந்த காலத்தைத் தவறாமல் பயன்படுத்தி தங்கள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ளவே வழக்கக் சொல்லில் உச்சி வேளை என்று வந்து விட்டது.

ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை உள்ள நேரமே அபிஜித் நேரம். பிரம்ம முகூர்த்தம் எப்படி நிர்மலான நேரம் எனப்பட்டதோ அதே போல் அபிஜித் காலமும் வெற்றிக்கான பூஜைகள் செய்திடும் காலம் ஆகும்.

ஜித்-என்றால் ஜெயித்தல், அபிஜித் என்றால் மிகச் சிறப்போடு வெற்றி பெறுதல் எனப்படும்.

அதாவது வழிபட்டால் வெற்றி கிட்டும் காலம். காலையில் சூரிய உதய காலத்திலிருந்து ஆறுமணி நேரம் கழித்து வருகின்ற உச்சி வேளைதான் இக்காலம் உத்திராடம் மூன்று நான்காம் பாதங்கள், திருவோணம், 1, 2-ம் பாதகங்கள் வருகின்ற ஒரு கால கட்டத்திலேதான் நான்முகனாகிய பிரம்மதேவன் பூமியையும் ஈரேழு பதினான்கு லோகங்களையும் வெற்றி பெற்று அடைந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

பரமேஸ்வரன் இந்த அபிஜித் நேரத்தில்தான் முப்புரங்களையும் வென்று எதிகளைத் தோற்கடித்து ஓடச் செய்தார். இறைவனுக்கே சோதனைகள் வந்தபோது இக்காலத்தைப் பயன்படுத்தினார். மனிதர்களாகிய நாமும் நம்முடைய தேவைகளை இறைவனிடம் கோரிக்கையாக வைத்து எந்த கடவுளை வழிபடப் போகிறோமோ அதன் முக்கிய மூலத்தை அறிந்து கொண்டு இக்காலத்தில் வழிபட அவர்களும் நண்பர்களாகி விடுவர்.

அபிஜித் உருவம் என்ன?

27 நட்சத்திரங்களுக்கும் உருவம் உள்ளதைப் போல இதற்கும் ஓர் வடிவம் இருக்கிறது. நான்கு தெருக்கள் சந்திக்கின்ற நாற்சந்தியே இதன் வடிவமாக உள்ளது. இதன் பொருள் ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்களாகிய வாழ்வியல் தர்மத்தின் வழியே நாம் சென்று கொண்டிருந்தால் பார்போற்றும் நட்சத்திரங்களைப் போன்று வாழலாம் என்பதே இதன் ரகசியச் சொல் குறியீடு ஆகும். இதைத் தான் மனிதன் நான்கையும் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். இதன் உருவ அமைப்பில்,

1ம் பகுதி -  புகழைக் குறிக்கிறது.
2ம் பகுதி - வெற்றியைக் குறிக்கிறது.
3ம் பகுதி - இறையருளைக் குறிப்பது.
4ம் பகுதி - ஐஸ்வர்யத்தைச் சொல்கிறது.

நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு கிழமைகளிலும் இதற்கு ஒரு சக்தி பிறந்து கொண்டே இருக்கிறது என்று வான சாஸ்திரிகள் கருத்து கூறுகின்றனர். உத்திராடம், திருவோண நட்சத்திர நாட்களில் மட்டும் கிழக்கு வானத்தில் அதிகாலையில் ஒரு கேள்விக்குறி போன்ற சிறு நட்சத்திரக் கூட்டம் தெரியும்.

இதன் தலை பாகத்தில் தனியாக அபிஜித் தெரியும் என்றும் இதை காண போதிய பயிற்சி தேவை என்றும் வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சிறப்பான இந்த அபிஜித் நட்சத்திரத்தைக் கண்டுவிட்டால், எல்லா செயல்களுமே வெற்றியாக முடியும். நமக்குக் குறிப்பிட்ட பணிகளில் தடை இருந்தால் அவை விலக அபிஜித் முகூர்த்த கால பூஜைகள் வெற்றி பெற சமய சஞ்சீவனமாக உள்ளன.

இந்த காலத்தில் சாதாரண மங்கள மந்திரங்களும், அஸ்திர மந்திரங்களும் இரட்டிப்பான பலன்களைத் தருகின்றன என்று பயன்படுத்தியவர்கள் சொல்கிறார்கள். அபிஜித் காலத்தில் வெற்றி தரும் வழிபாடுகள்-இக்கால கட்டத்தில் திருமண நிச்சயதார்த்தங்கள் அதிகம் எழுப்பபட்டு அவை மணமுறிவுகளாக ஆறு மாதங்களில் ஆகி விடுகின்றன.

அதிர்ஷ்டம் தரும் அபிஜித் நட்சத்திரம்...

ஜோதிடத்தின் ஆரம்ப காலத்தில் 28 நட்சத்திரங்கள் வழக்கத்தில் இருந்து இருக்கிறது. வம்சோத்திரி தேசா கணிதத்திற்கு பிறகு 27 நட்சத்திரங்களாக சுருக்கப்பட்டு விட்டது. அபிஜித் நட்சத்திரம் மகர ராசியில் அதாவது உச்சிராசியில் உத்திராடம் நட்சத்திரத்தின் கடைசி நான்கில் ஒருபங்கும் திருஒணம் நட்சத்திரத்தின் முதல் பதினைந்தில் ஒரு பங்கும் அபிஜித் நட்சத்திரம் ஆகும். அதாவது மகராசி 276.40.00 பாகைமுதல் 280.53.20 பாகை வரை. ஒரு நட்சத்திரத்தின் தோராய நாழிகை 60 எனும்போது உத்திராடத்தின் இறுதி 15 நாழிகைகளையும், அதனை அடுத்துள்ள திருவோணத்தின் முதல் 4 நாழிகைகளையும் உள்ளடக்கிய மொத்தம் 19 நாழிகைகளும் அபிஜித் நட்சத்திரம் ஆகும்.

உத்திராடம் முடியும் பாகை = 280.00 பாகை

உத்திராடத்தின் நன்கில் ஒரு பங்கு = 3.20 பாகை

திருவோணத்தின் 15ல் ஒரு பங்கு = 0.53.20 பாகை

அபிஜித் நட்சத்திர மொத்த பாகை = 4.13.20 பாகை

அபிஜித் நட்சத்திரம் = 276.40.00 பாகைமுதல் 280.53.20 பாகை வரை.

குறிப்பு...

ஒருசில நூல்களில் உத்திராடம் 4ம் பாதமும் + திருவோணம் 1 ம் பாதமும் அபிஜித் என்றும்,

மேலும் ஒருசில நூல்களில் உத்திராடம் 3,4ம் பாதமும் + திருவோணம் 1,2 ம் பாதமும் அபிஜித் என்றும்,

இன்னும் ஒருசில நூல்களில் உத்திராடம் முடிவில் 5 நாழிகையும், திருஒணத்தின் ஆரம்பத்தில் உள்ள் 4 நாழிகை 4 வினாடியும் சேர்ந்த 9 நாழிகை 4 வினாடி அபிஜித் என்றும் சொல்லப்பட்டுள்ளது).

அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்...

1) அதிர்ஷ்டம் மிக்கவர்கள்.
2) அன்பும், கண்டிப்பும் மிக்கவர்.
3) தலைமை பண்பும் சேவை மனமும் கொண்டவர்கள்.
4) தொழில் கெளரவம் மிக்கவர்கள்,
5) செய்யும் தொழில் மீது பற்றுக்கொண்டவர்கள்.
6) சுகமும் மகிழ்ச்சியும் மிக்கவர்கள்.
7) தாய், தந்தை இருவருக்கும் பிடித்தபிள்ளை.
8) தாய், தந்தை இருவருவரும் குணமும் ஒருங்கே உள்ளர்.
9) தாய், தந்தை இருவருவரின் சாயலும் உள்ளவர்.
10) கல்வி விசயத்தில் கவனம் தேவை, தடைபட வாய்ப்பு உண்டு.
11) தொழிற்கல்வி சிறப்பு தரும்.
12) தர்ம குணம் உள்ளவர்கள்.
13) மருத்துவ துறையில் பணிபுரியும் வாய்ப்பு உண்டு.
14) தொடர் முயர்ச்சியாளர்.
15) அறிவாளிகளை உடன் வைத்து இருப்பவர்.
16) திருமணத்திற்கு பிறகு தந்தை அன்பு தடைபடும் வாய்ப்பு உண்டு.
17) ஆய்வு மனபண்மை உள்ளவர்.
18) சுய தொழில் நன்மை தரும்.
19) உத்திராடம் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தை குறிக்கும்.
அதிக நட்பு வட்டாரம் இருக்கும்.
20) ஆன்மீக பற்றும் தன்னம்பிக்கையும் ஒருங்கே கொண்டவர்கள்.

(இவை அனைத்தும் பொதுப்பலன்கள்)

அபிஜித் முகூர்த்தம்...

நண்பகல் உச்சி நேரம் 11.45 A.M to 12.15 P.M மணி வரையுள்ள நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும். அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும். எல்லா நாட்களிலும் சூரிய உதய காலம் 5.45 A.M to 6.15 A.M (கோதூளி முகூர்த்தம்), உச்சி காலம் 11.45 A.M to 12.15 P.M (அபிஜித் முகூர்த்தம்), அஸ்தமான காலம் 5.45 P.M to 6.15 P.M (கோதூளி முகூர்த்தம்), ஆகிய மூன்று முகூர்த்தங்களும் தோஷமற்ற முகூர்த்த காலங்கள் ஆகும்.

இந்த மூன்று வேளைக்கும் நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய பஞ்சாங்க தோசம் கிடையாது. சூரிய உதய அஸ்தமன நேர பேதத்தை கணக்கில் கொள்ளவும். நல்ல பஞ்சாங்க நாளும் மேற்கண்ட கோதூளி முகூர்த்தம் அல்லது அபிஜித் முகூர்த்தமம் வந்தால் அதிக பலன் தரும்.

அபிஜித் நட்சத்திரத்தின் மகத்துவம்...

கலியுகத்தில் இதனை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இதனை நட்சத்திர மண்டலத்தில் இருந்து எடுத்து தன் மயிற்பீலிக்குள் ஒளித்து வைத்து விட்டார்.

இதனை குறிக்கும் சித்த ஏட்டு நட்சத்திர வாக்கிய சூத்திரம்...

நாலேழு கண்டதிரு நானிலமே நன்றாங்கே
நற்கண்ண மயிற்பீலி நன்னுதலின் காரணமாம்
ஏலேல அபிசித்தும் அருவத்துள் ஒடுங்கானே
மூநவமாய் ஆகுதரு முகதாரைக் கலிவானே

அதாவது நாலேழு – 28 நட்சத்திரங்களாய் பொதிந்திருந்த துவாபர யுக வான்மண்டலம், தர்மத்தை காக்க வேண்டிய காரணத்தால் ஏற்பட்ட கண்ணபிரானின் திருவிளையாடலின்படி, மூநவமாய் 3 x9 = 27 நட்சத்திங்கள் என ஆயிற்று.

இதனால் இந்த நட்சத்திரம் மேன்மேலும் உன்னதம் பெற்றுவிட்டது.

அபிஜித் நட்சத்திரமும் அபிஜித் முகூர்த்த நேரமும் தோன்றிய தலம்...

திருமங்கலக்குடி ஸ்ரீ பிராணவரதேஸ்வரர் ஆலயமாகும்.

அபிஜித் நட்சத்திர காலத்தில்,
திருமங்கலக்குடி,
ஒன்பத்துவேலி,
சுரைக்காயூர்,
ராப்பட்டீச்சரம் போன்ற காலசக்தித் தலங்களில் வழிபட்டு வந்தால் காலசக்திகள் நன்கு பரிணமிக்கும்.

இது சந்ததி விருத்திக்கு மிகவும் முக்கியமானதாகும்.

அபிஜித் நட்சத்திரத்தின் அதிதேவதையாக ஸ்ரீ பிரம்மாவும், பிரத்யதி தேவதையாக ஸ்ரீ நரசிம்ம மூர்த்திப் பெருமாளும் துலங்குகின்றனர்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய கிரீடத்தின் மயில் இறகில் அபிஜித் நட்சத்திரத்தைச் சூடிக் கொண்டு முதன் முதலாக பூமியில் காட்சி அளித்த தலமே திருக்கண்ணபுரம்.

நாம் வாழும் கலியுகத்திற்கு ஓரளவேணும் அபிஜித் நட்சத்திர சுபமங்கள காலசக்திகளை அளிக்க வல்லதே திருக்கண்ணபுரம் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலாகும். விஸ்வகர்ம மூர்த்தி இப்பூவுலகையே ஆண்ட உபரிசரவசு மாமன்னருடன் சேர்ந்து தாமே நேரில் வந்து பார்த்து நிறுவிய ஆலயம். இவ்வாலய ”உத்பலாவதக” விமானமும் அபிஜித் நட்சத்திரப் பிரகாசத்தைச் சூடி உள்ளது என்பது தேவ சூக்கும ரகசியமாகும்.

அபிஜித் நட்சத்திரம் புறக் கண்களுக்கு தரிசனமாகாதது போல,
இவ்வாலயத்தினுள் எங்கிருந்து பார்த்தாலும் மூலக் கருவறை விமானம் கண்ணுக்குத் தென்படாத அதிசயம் கொண்ட வியத்தகு “ஸ்ரீவர்ச்சஸ வாஸ்து சாஸ்திரக் கோயில்”

அனைத்து நட்சத்திரக்காரர்களும் உத்தராயணம், தட்சிணாயணக் காலங்களில் ஒரு முறையேனும் திருக்கண்ணபுரத்தில் வாழ்நாள் முழுதும் வழிபட்டு வரவேண்டும்.

இங்கு பிரதி அமாவாசை தின பகல் உச்சி நேரக் காலத்தில் அபிஜித் நட்சத்திரத்தைக் கொண்டவரான ஸ்ரீ விபீஷண ஆழ்வாருக்கு  “நடையழகு காட்டி சேவை சாதிக்கும் வைபவம் நிகழ்ந்து வருகின்றது.

அப்போது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா உத்தமமான அபிஜித் நட்சத்திர சக்திகளைக் கலியுக ஜீவன்களுக்கு வார்த்தளிக்கின்றார்.

இந்த உற்சவம் அமாவாசைத் திதி தொக்கி நிற்கும் நாளில் கொண்டாடப்படுவதால், இதற்கான அமாவாசை நாளை ஆலயத்தில் முன்னரே கேட்டறிந்து தரிசிக்கவும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.