24/04/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 33...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரில் இன்று 33-ம் பகுதியில் ஒரு புனித தீர்க்க தரிசனத்தை நாம் காண உள்ளோம்.

புனிதம் என்பது மகத்துவம் வாய்ந்தது. அது இறைவனுக்கே உரிய அற்புதமான செயல்கள் என்று வேதங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு மனிதனிடத்திலும் அற்புதங்கள் நிறைந்து இருப்பின் அவனை மக்கள் மகான் என்று அழைக்கின்றனர். அவனின் மகத்துவத்திற்கு இறைவனின் அற்புதமான புனித செயலே அவனுக்குள் மறைந்துள்ள தன்மையாகும். இதுவே அவனை மகானாக மாற்றுகிறது. இந்த மகானின் அறிவால் (ஞானத்தால்) வெளிப்படுத்தப்படும் உலக நடப்புகள் பற்றிய குறிப்புகளே இன்றளவும் தீர்க்கதரிசனமாக கருதப்படுகின்றன.

தீர்க்க தரிசனம் என்பது யார் வேண்டுமானாலும் உரைக்க முடியாத ஒன்றாகும். அது வெளிப்படவும் முடியாது. இதுவே உலக விதி. இதுவே உண்மையும்கூட. ஒருவர் தனது ஞானத்தால் நான் காட்சிகளாக கண்டேன். அதனை தீர்க்க தரிசனமாக உங்களுக்கு உரைக்கின்றேன் என்று கூறினால் அவர் உண்மையில் தீர்க்க தரிசனத்தை உரைக்கவில்லை என்று அர்த்தம். தனக்குள் உணரப்பட்ட ஒன்றையே அவர் பிறர் இடத்தில் வெளிப்படுத்துகிறார். ஆகவே இது தீர்க்க தரிசனம் அன்று. இது புனிதமானதும் அன்று.

அப்படியானால் இவ்வுலகில் புனிதமான அந்த அற்புத ஆற்றலை கொண்டவர்கள் உரைத்த தீர்க்க தரிசனத்தை அவர்கள் எப்படி உரைத்திருப்பார்கள் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். உண்மையில் தீர்க்க தரிசிகளுக்கு இது எப்படி சாத்தியமாகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதுதான் உண்மை, எந்த ஒரு தீர்க்க தரிசிக்கும் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி எதுவுமே தெரியாது.

அப்படியானால் அவர்களுக்கு இது எப்படி சாத்தியமாகிறது. ஆம், அவர்களுக்குள் அற்புதமாக நிறைந்துள்ள கடவுளின் புனிதமே அவர்களின் ஞானத்தின் வழியே உரைக்கின்றது. ஆகவே இவ்வாறு உரைக்கப்படும் உலகியல் நிகழ்வுகளைப் பற்றிய முன்னறிவிப்பே உண்மையான தீர்க்க தரிசனங்களாகும்.


ஜோதிடர்களும், உலகியல் நடப்புகளை ஆய்வு செய்பவர்களும், மனோதிடத்தை பயன்படுத்துபவர்களும், புனித நூல்களை படித்து தீர்க்க தரிசனத்தை உரைப்பவர்களும், சித்தர்கள், ஞானிகள் எழுதிய ஓலைச்சுவடிகளை படித்து வருங்காலத்தை கணித்து சொல்பவர்களும் தீர்க்க தரிசிகள் அல்ல. அவர்கள் அனைவருமே ஏற்கனவே சொல்லப்பட்ட உண்மைகளை அவர்கள் கண்டறிந்து மீண்டும் கூறும் குறிப்புகளாகும். இவைகளில் பெரும்பாலானவை நடப்பது இல்லை. இவைகள் வருங்கால தீர்க்க தரிசனங்கள் அன்று.


இன்று ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடர் 33-ம் தீர்க்க தரிசனத்தை அறிவிக்கின்றது. அதாவது கடல்மீது நடந்து வந்தவரும், கல்லறையிலிருந்து எழுந்தவரும், வானத்தில் தூய ஆவி வடிவில் மேலே சென்றவரும் கர்த்தர், இயேசு, இரட்சிப்பவர், மீட்பர், மெசியா என்று அழைக்கப்பட்டவருமான புனிதர் ஒருவர் இவ்வுலகத்தில் மறுபிரவேசம் அடைந்து, இவ்வுலகின் அடுத்த மகா தீர்க்க தரிசி யார்?  என்று உலக மக்களுக்கு அறிவிக்கும் ஒரு நிகழ்வு இந்த உலகத்தில் நடக்க உள்ளதாக 33-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தெரிவிக்கின்றது.


வான் மண்டலத்திலிருந்து தேவதூதர்கள் தோன்றி எக்கால ஓசையுடன் பவனி வருவார்கள் என்றும், அச்சமயத்தில் வானத்தில் புனித நட்சத்திரம் ஒன்று தோன்றி ஒளிரும் என்றும், வானத்தின் மேகங்களுக்கு இடையே ஒன்பது முறை பலத்த இடிச்சப்தம் கேட்கும் என்றும், அந்த தருணத்தில் ஜெருசலத்தில் ஒரு மகா அதிசயம் நடக்கும் என்றும், இதுவே உலகில் நடக்கும் முதல் புனிதமான செயல் என்றும், அப்பொழுது இரட்சகர் யார்? என்ற உண்மை உலகத்திற்கே தெரியவரும் என்று 33-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகின்றது. மேலும் தீர்க்க தரிசனத்தின் புனிதத்தை இதன் வழியாக உலக மக்கள் நிச்சயம் உணரும்போது, இத்தொடர் ஆகாயத்தில் ஒரு ஒளியாக பிரகாசிக்கும்...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.