24/04/2017

சித்தராவது எப்படி - 34...


குண்டலினி சக்தி பயணம் - பாகம் பத்து...

விழிப்பு நிலை இல்லாமையின் விபரீத போக்கு...

விழிப்பு என்றால் வெறும் கண்ணை திறந்து இருக்கும் நிலையென்று மிகவும் அடி மட்ட அர்த்ததோடு மனித குலம் நினைத்துக் கொண்டு இருக்கிறது.. கடவுள் நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடியதும் அதுவே..

தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுளை காண முடியாமல் இருப்பதற்கு காரணம் விழிப்பு நிலை இல்லாததே,, அப்படி கண்ட கடவுளிடம் வரங்கள் எதுவும் பெற முடியாததும் விழிப்பு நிலை குறைபாடே.. அப்படி பெற்றதை பயன் படுத்த தெரியாததும் விழிப்பு நிலை குறைபாடே..

விழிப்பு நிலை குறைபாட்டால், இதிகாச நாயகர்கள் பட்ட அவதிகள் கொஞ்சம் அல்ல.. தருமரின் விழிப்பு நிலை குறைப்பாட்டால், சூதாட்டத்தில் தன் இராஜ்ஜியம் மட்டும் அல்ல திரௌபதியையும் இழக்கவேண்டிய நிலைவந்தது..

இராமனே தன் மனைவி சீதையை இராவணிடம் பறி கொடுக்கக் கூடிய நிலை வந்தது.. சிவனார் சூரபத்மனனுக்கு வரம் அளித்து பட்ட அவஸ்தை அனைவரும் அறிந்ததே..

திரு மூலரே கூடு விட்டு கூடு பாயும் போது தன் தேகம் இழந்து முடிவில் மாடு மேய்பவரின் உடம்பில் புக வேண்டியதாயிற்று..

இப்படி ஆயிரம் ஆயிரம் உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.. எல்லா மகான்களும் விழிப்பு நிலை குறைப் பாட்டாலே மறைந்து போனார்கள்..

வாழ்ந்த காலம் சிறப்பாக இருந்தாலும் விழிப்பு நிலை குறைபாட்டால் மறைந்து போக வேண்டிய நிலை வந்தது..

விழிப்பு நிலை குறைப்பாட்டாலே தேகம் சிறுக சிறுக சிதைவடைந்து முடிவில் மரணம் நிகழ்கிறது..

இது இறைவன் அவதாரம் என்று சொல்லிக் கொண்ட அனைத்து மகான்களுக்கும் பொருந்தும்..

தங்கள் மறைவிற்கு பல பல சமாதானங்கள் சொன்னாலும், விழிப்பு நிலை கருத்துக்கு முன்னால் எல்லாமே பொய்யாய் போய் விட்டனர்.. இதை சற்று விழிப்பு நிலையில் உணர்ந்தால் மட்டுமே விளங்கும்..

எந்த மதத்தின் கதாநாயகர்களும் விழிப்பு நிலை என்ற ஒன்றை உணராமல் போய் இருந்து இருக்கலாம்.. அல்லது அதைப் பற்றி தெரியாமல் போய் இருந்து இருக்கலாம்..

அவர்கள் மேல் மிகுந்த பற்று கொண்டவர்கள் விழிப்பு நிலை குறைபாட்டால் அந்த மகான்கள் அடைந்த மறைவுதனை கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை..

அதனை ஜீவ சமாதி என்ற கௌரவப் பட்டம் கொடுத்து பூஜிக்கத் தொடங்கி விடுகிறார்கள்..

மதங்களில் சொல்லப் படும் அனைத்திலும் விழிப்புக்கு முக்கியத்துவமும் பயிற்சியும் சொல்லப் படாததால், இன்று மதமே விழிப்பு நிலைக்கு எதிராக செயல் படுகிறது..

எல்லா மதங்களும் மயக்க நிலை நோக்கி வேகமாக நகரத் தொடங்குவதால் எல்லா மதங்களும் உலக சமாதானத்திற்கும் அமைதிக்கும் முதல் சவாலாக உள்ளன..

நெஞ்சை பதற வைக்கும் அராஜக செயல்களுக்கு கடவுளிடமிருந்து இன்று வரை தகுந்த உடனடி தீர்வு வராததால், கடவுளே விழிப்பு நிலையின்றி மயங்கி கிடக்கின்றாரோ என எண்ணத் தோன்றுகிறது..

என்ன தான் விடிவு என்று எண்ணிப் பார்க்கையில் அனைத்திற்கும் ஒரே தீர்வு நம் அக குருவினை எழுப்பி விட செய்வதே.. அககுருவின் விழிப்பு நிலையால் அனைத்து செயல் கூடும்..

மயக்கமும் மோன நிலையை தரும் பயிற்சிகளையும், பரவசம் பேரானந்தம், பொய்யான சமாதானம் தரும், விழிப்பு நிலையற்ற பக்தி மார்க்கங்களையும், தகுந்த அடையாளம் காட்டி, நம்மை நேர் வழியில் வழி நடத்தும் தகுதி, அந்த அக குருவிடம் மட்டுமே உள்ளது..

அந்த அக குருவினை எழ செய்யும் சிவ கலப்பு யோகம் இப்போது புது பொலிவோடு வர தொடங்கி விட்டதால் அறிவு என்ற ஆகாய வானில் நம்பிக்கை நட்சத்திரம் உதிக்கத்தொடங்கி விட்டது..

அது சூரியனை போல் பிரகாசிக்க தொடங்கி, விழிப்பு என்ற பெரும் பிரகாசத்தை வாரி வழங்க, அந்த சூரிய கனலில் நிறை நிலை மனிதன் அல்லது சித்தர் உருவாகும் காலம் வெகு தூரம் இல்லை என நம்புவோமாக..

இறைவனே தான் படைத்த ஜீவர்கள் அந்த நிலைக்கு உயரட்டும் என்று காத்துக் கொண்டும் இருப்பார் போலும்..

சுவாச ஒழுங்கிலே தொடங்கி பல படிகளில் அளவற்ற விழிப்பு நிலை பெருக்கத்தால் எல்லாம் செயல் கூடும் என்பது திண்ணம்... சத்தியமும் கூட...

அதை, மறவாது நம்பிக்கையோடு பயின்று, செம்மை, சிவநிலை பெறுவோமாக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.