12/08/2018

சித்தநெறி...


சித்தர்கள் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தி இறைப் பொருளுடன் ஒன்றுவதையே ஒருவிதமான ரசவாதமாகப் பயின்றனர்.

இதையே 'தெய்வீக ரசவாதம்' என்றும் 'பேரின்பரசவாதம்', 'இன்பரசவாதம்', என்றும் 'ஞானரசவாதம்' என்றும் சொல்வார்கள்.

செம்பு பொன்னாகும் சிவாயநம வெனில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரியும் எனச் பொன்னான திருவம்பலவே.

என்று திருமூலர் கூறியிருக்கிறார்.

தூரத்தில் இருக்கும் மலையைக் கிட்டத்தில் தோன்றச் செய்து, கிட்டத்தில் இருந்த மலையைத் தூரத்திற்குச் செல்லவைப்பது;

ரொம்பவும் கிழட்டு ஆசாமிகளை இளைஞர்கள் ஆக்குவது; குழந்தைகளாக இருக்கும் மக்களைக் கிழடாக ஆக்குவது.

ஆணைப் பெண் வடிவிலும் பெண்ணை ஆண்வடிவிலும் தோன்றச் செய்வது.

மலடியைப் பிள்ளைபெறச் செய்தல்.

அங்கவீனர்களுடைய குறைகளைப் பலரும் காணும்போதே உடனே தீர்த்து அவர்களைச் சீர்படுத்துவது.

நாலு லோகத்தையும் பொன்னாக மாற்றுவது.

கையில் வைத்திருக்கும் மாத்திரைக்கோலை ஆகாயத்தில் வீசி எறிந்து, அதை அப்படியே நெட்டுக்குத்தலாய் நிறுத்தி, அதன்மேல் ஊசியை நெட்டுக்குத்தலாய் நிறுத்தி, அந்த ஊசியின் முனைமேல் ஒரு காலின்
பெருவிரலை ஊன்றி அசைவின்று நின்று, அதன்பின்னர் அதே ஊசிமுனை மீது தலைகீழாக நின்று பாதங்கள் மேலே வானில் மலர்ந்திட அப்படியே சுழல்வது.

பறந்து சென்று விண்ணில் தாவி மேகத்தைப் பிடித்து, இடி தோன்றச் செய்து, அந்த மேகத்திலிருந்து குடிநீரைப் பிழிந்தெடுத்து பார்ப்பவர்களெல்லாம் அதிசயம் போல் காட்டுவது.

இது போன்ற சித்திகளைப் பற்றி ஏராளமான விபரங்களைப் பெரும் பெரும் சித்தர்கள் எழுதியுள்ளார்கள்.

சித்தம் போக்கு சிவன்போக்கு என்பது முதுமொழி.

அஃதாவது மனம் போன போக்கெல்லாம் போகக் கூடியவர் சிவபெருமான் என்பதல்ல இதன் கருத்து. சிவனுடைய போக்கு அன்பு நிலை. அதனாலேயே ‘அன்பே சிவம்’ என்றார்.

திருமூலரும்...

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே
என்கிறார்.

இவ்வன்பு நிலையை மையமாகக் கொண்டு இறைவனை நேசித்தவர்கள் சித்தர்கள். அதனால் சித்தர்கள் பின்பற்றிய வழி அன்பு நெறியாகும்.

கடவுள் வெளியில் இல்லை , நம் உள்ளத்திற்குள்ளே இருக்கின்றான் என்று கூறி வலியுறுத்தியவர்கள் சித்தர்கள்.

சித்தர்கள் மெய்யறிவினால் ஐம்புலனைக் காத்து வாழ்வதுதான் முக்தியாம் என்கின்றனர்.

ஐம்புலன்களின் உணர்வுகளை வழிமுறையோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் ‘பொறிவாயில் ஐந்து அவித்தல்’ என்றும், சிவநெறியைச் சார்கின்ற அறிவு பெற்று, வரும் வழியைத் தெரிந்து கொண்டால் அதன்பின் இந்த உடம்பு சாவை அடைவதில்லை என்றும்..

ஐந்து புலன்களின் அவாவைக் கட்டறுத்திருந்தால் இந்த உடம்புக்குச் சாவேயில்லை என்றும் கூறுகின்றனர்.

உடம்பினை முழுவதும் அழியாமல் காத்துக் கொள்ள முடியும். அதற்குவழி ஒன்றே தான். குண்டலி யோக சாதனையால் மூலதாரத்தினின்று எழுப்புகின்ற குண்டலினி சக்தியை நெற்றிக்கு நேராகச் சுழிமுனையிலே வியாபித்திருக்கும் ஞானாக்கினியைக் காண வேண்டும். அப்படிக் கண்டு விட்டால் உடம்பானது என்றைக்கும் அழியாதிருக்கும் என்று கூறி, இதுவே சாகாக் கலை அல்லது மரணமிலாப் பெருவாழ்வு என்கின்றனர். இச்சாகாக் கலையைப் பற்றிச் சித்தர்கள் விரிவாகக் கூறுகின்றார்கள்.

சித்த வைத்தியர்கள் அல்லது சித்தர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டு நோயுடன் வருபவர்களின் கையின் நாடித் துடிப்பின் தன்மைகளை அறிந்து கொண்டு, நோயினை நீக்குவர்.

மலைகளிலிருந்து கொண்டு வரும் மூலிகைச் செடிகளின் இலைகளைப் பொடியாக்கியும், தைலமாகவும் தருவர்.

இம்மருந்து உடலில் மெதுவாகக் கரைந்து, இரத்தத்துடன் கலந்தபின் நோய் முற்றிலும் குணமாகி விடும். இதனால் எந்த விதமான பின் விளைவும் இருக்காது. தீராத வியாதிகளும், தீர்த்து வைத்திடும் வைத்தியம் சித்த வைத்தியம் ஆகும். இவ்வைத்தியத்தினை எல்லாச் சித்தர்களும் பின்பற்றியுள்ளனர்.

சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை, நூல்களை
படைத்துள்ளனர். மொழி நூல், யோகநூல் ; மந்திரம் ; தந்திரம் ; யந்திரம் ;மருத்துவ நூல் ; புவியியல் நூல் ; தாவரயியல் நூல் ; சோதிட நூல் ;கணித நூல் ; வானநூல் என தமிழுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

சில அனுவபங்களை படித்தால் புரியும் , சில கேட்டால் , சில நுகர்ந்தால், சிலவே உணர்ந்தால் புரியும். அத்தனை விதங்களிலும் , நிறைவாய் , சுகானுபவமாய் நமக்கு சாந்தமும் -இன்பமும் அளிப்பது சித்தர் இலக்கியம்.

மனம் பழுத்தால் பிறவி தங்கம் -
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் -
தங்கத்தை எண்ணி பங்கம் போதாதே – தங்க இடம் பாரப்பா….

இதுவே சித்தர்களின் கொள்கை. நலம் சிறக்க , நல்லன விளைக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.