24/06/2018

வேற்று கிரகவாசிகள் நமது எதிர்காலச் சந்ததியினரா.?


வேற்றுகிரகவாசி என்றுவுடன் நாம் வர்ணிப்பு தலை பெரிதாகவும், கைகால்கள் சிறியதாகவும் இருக்கும் என்பதே ஒருவேளை அந்த வடிவத்தில் இருப்பது நம் எதிர்காலச் சந்ததி மனிதனா?  அப்படி இருக்க முடியுமா? என்று சிலர் சந்தேகங்கள் கேட்டிருந்தனர்,எனக்கும் இந்த கேள்விகள் எழுந்தன கேள்வி எழுப்பியவருக்கு நன்றி.

'ஒரு உயிரினம், தனது எந்த உடல் உறுப்பை அதிகம் பயன்படுத்தாது போகின்றதோ,அந்த உடல் உறுப்பு, படிப்படியாகக் குறுகி இல்லாமலே போகலாம்' என்றார் டார்வின். அதற்கு உதாரணமாக, 'மனிதனுக்கு வால் இல்லாமல் அகன்றது அதனால்தான்' என்கிறார். அதே போல, 'ஒரு உயிரினம், எந்த உறுப்பை அதிகம் பயன்படுத்துகிறதோ, அந்த உறுப்பு வளர்ந்து பெரிதாக மாறலாம்' என்றும் சொன்னார். அதற்கு உதாரணமாக, ஒட்டகச் சிவிங்கியின் தலை நீண்டதைச் சொல்கிறார். இதுபோல பல ஆயிரம் வருடங்களுக்குப் பின், நமது எதிர்காலச் சந்ததியினரும் கைகால்களை அதிகம் பயன்படுத்தாததால் அவை சிறுத்தும், மூளைக்கு அதிகம் வேலை கொடுப்பதால், தலை பெரியதாக வளர்ந்தும், இன்று நாம் வேற்று கிரகவாசிகள் என்று நம்பும் ஒரு உருவத்துக்கு மாறலாம் அல்லவா? இப்படி நான் சொல்வதால்,அப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு உடனே நீங்கள் வந்துவிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.காரணம், நான் சொல்பவை எல்லாமே சாத்தியக்கூறுகள் மட்டும்தான். அவையே முடிவான முடிவுகளல்ல. 

வேற்றுகிரகவாசிகளின் பூமிக்கு வந்து போவதானால் அதற்கு இரண்டு அடிப்படைச் சாத்தியங்கள்தான் உண்டு. ஒன்று பூமி தாண்டிப் பிரபஞ்சத்தில் வேறு எங்கோ இருக்கும் ஒரு நட்சத்திரத்துக்கு அருகில் இருக்கும் கோளில் இருந்து வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வரவேண்டும். இல்லையெனின், பூமியின் எதிர்காலச் சந்ததியினர், கால இயந்திரத்தின் உதவியினால் தற்சமயம் நாம் வாழும் இந்தக் காலத்துக்கு வரவேண்டும்.


இது தவிர்ந்து வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வரச் சாத்தியமே இல்லை. அது போல, வேற்றுகிரகவாசிகள் மிகத்தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து பூமிக்கு வருவதாயின், ஒளியின் வேகத்தில் பிரயாணம் செய்தாலும் பல ஆண்டுகள் எடுக்கலாம் என்றும், புள்ளியை விடச் சிறிய பூமியை இந்தப் பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகள் கண்டுபிடிப்பது என்பதே மிகச்சிரமம்.

இதனால் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்திருக்க முடியாதோ என்ற சந்தேகமும் நமக்கு வந்தது. ஆனால் நவீன அறிவியலின் கோட்பாடு ஒன்று இந்தச் சந்தேகத்தை உடைத்தெறிந்தது. அது என்ன கோட்பாடு என்பதை நாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன் சில வார்த்தைகள்.இப்போது சொல்லப் போவது மிகவும் சிக்கலான அறிவியல் கோட்பாடு. சிலசமயங்களில் நான் சொல்வது உங்களுக்குப் புரியாமல் போகலாம். அப்படிப் புரியாமல் போனால் அது உங்கள் தவறல்ல.அதைச் சரியாகப் புரிய வைக்க முடியாமல் போன எங்கள் தவறாகத்தான் அது இருக்க முடியும். அப்படிப் புரிந்தாலும், அதில் உள்ள நம்பகத்தன்மை பற்றிய சந்தேகமும் உங்களுக்கு எழலாம்.

இதுவரை இந்தக் கோட்பாட்டை விஞ்ஞானிகளும், இயற்பியலாளர்களும் மறுக்கவில்லை.அனைவருமே ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இவர்கள் ஏற்றுக் கொண்ட ஒன்றே இந்தக் கோட்பாடு உண்மையானதாக இருக்க அதிக சாத்தியத்தைக் கொண்டது என்றாகின்றது. இருந்தாலும் இதுவரை அது கோட்பாடு என்னும் நிலையிலேயே உள்ளது.

அணு முதல் அண்டம் வரை உள்ள அனைத்தையும் நான்கு அடிப்படையான விசைகளே கட்டுப்படுத்துகின்றன என்று அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது.

மின்காந்த விசை
(Electromagnetic Force),

திடமான அணுக்கரு விசை
(Strong Nuclear Force),

திடமற்ற அணுக்கரு விசை
(Weak Nuclear Force),

ஈர்ப்பு விசை
(Gravitational Force)

என்பவையே அந்த நான்கு விசைகளும் ஆகும்.

இந்த அண்டம் தோன்றியதாகக் கருதப்படும் பெருவெடிப்பின் (Big Bang) போதுதான் இந்த நான்கு விசைகளும் தோன்றின என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

அதாவது ஒரு சிறிய பொருள் ஒன்று, எந்த ஒரு விளைவும் இல்லாமல் பல காலம் அமைதியாக இருந்து, ஏதோ ஒரு கணத்தில் பெரிதாக வெடித்ததால்தான் அண்டம் தோன்றியது.அப்படிப் பார்த்தால், பெருவெடிப்பினால் தோன்றிய இந்த நான்கு விசைகளும், பெருவெடிப்பிற்கு முன்னால் ஒன்று சேர்ந்து, ஒரே விசையாகச் சமநிலைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்திருக்க வேண்டும் அல்லவா?

அதனால், இயற்பியலின்படி இந்த நான்கு விசைகளும் ஒரே கணிதச் சமன்பாட்டில் வரக்கூடிய வகையில் நிச்சயம் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தனர்.

அந்தச் சமன்பாடு எதுவென்று கண்டுபிடிப்பதற்கு, ஐன்ஸ்டைன் முதல் இன்றுள்ள எல்லா விஞ்ஞானிகளும் முயற்சிக்கின்றனர். இதுவரை அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இந்த நான்கு விசைகளையும் ஒன்று சேர்க்கும் கோட்பாட்டை தியரி ஆஃப் எவ்ரிதிங்க் (Theory of everything) என்று அழைக்கிறார்கள். ஐன்ஸ்டைன் தனது இறுதிக் காலங்கள் அனைத்தையும் இந்தச் சமன்பாட்டைக் கண்டு பிடிப்பதிலேயே செலவிட்டார்.

ஆனாலும் கண்டுபிடிக்க முடியாமலே மரணத்தைத் தழுவினார்.

இப்படி ஒரு சமன்பாட்டைக் கண்டுபிடிப்பதில் ஏன் இவ்வளவு சிரமங்கள் உள்ளன என்று படிப்படியாகப் பார்த்த போதுதான், எங்கோ தவறு செய்கிறோம் என்னும் யோசனை விஞ்ஞானிகளுக்கு வந்தது.

அணுக்களைப் பிரித்துப் பார்த்தால் நம்மால் கண்டுபிடிக்க முடியாத பல உப அணுத்துகள்கள் (Subatomic Particles) அணுவுக்குள் இருக்கின்றன என்னும் உண்மைகள் மெல்லப் புரியலாயிற்று. பல விதமான, பல தன்மையுள்ள உப அணுத்துகள்கள் அணுவுக்குள் இருக்கின்றன என்பதை முதலில் கோட்பாட்டு ரீதியாக முடிவு செய்தார்கள். அணுக்கருக்களை ஒன்றுடன் ஒன்று மிக வேகமாக மோதவிட்டு, அதன் மூலம் உப அணுத்துகள்களை  ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்கவும் ஆரம்பித்தார்கள். இப்படித்தான் 'ஹிக்ஸ் போஸான்' (Higgs Boson) என்னும் 'கடவுள் துகள்' என்று சொல்லப்பட்ட உப அணுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.


இவற்றையெல்லாம் ஒன்றுபடுத்தி, ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கிப் பார்த்தபோது, நான்கு விசைகளையும் சமப்படுத்தக் கூடிய சமன்பாடு ஒன்றை உருவாக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்குவதன் மூலம் 'தியரி ஆஃப் எவ்ரிதிங்க்' என்பதற்கான சமன்பாட்டை உருவாக்கக் கூடியதாக இருந்தது. நான்கு விசைகளையும் ஒன்றாகக் கொண்ட சமன்பாட்டை வடிவமைக்க உருவாக்கப்பட்ட புதிய கோட்பாடுதான்
#அதிர்விழைக்_கோட்பாடு' என்று சொல்லப்படும் #ஸ்ட்ரிங்க்_தியரி' (String Theory) ஆகும்.

ஸ்ட்ரிங்க் தியரி உருவாகியதைத் தொடர்ந்து எம் தியரி (M theory) என்னும் பெயரில் இன்னுமொரு கோட்பாடும் தோன்றியது. இந்த இரண்டு கோட்பாடுகளும் தோன்றியதால் அண்டம் எப்படி உருவாகியது, எந்த நிலையில் அண்டம் இருக்கிறது, நாம் அண்டத்தில் எப்படி வசிக்கிறோம் என்ற பல உண்மைகள் (அவை உண்மைகளா என்று தெரியாவிட்டாலும்) கோட்பாடுகளாக வெளிவரத் தொடங்கின. அப்படி வெளிவந்த உண்மைகளை பற்றி அடுத்த பதிவில்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.